Skip to main content

ஒரு எதார்த்தமான கற்பனை உரையாடல்.....



ஒரு எதார்த்தமான கற்பனை உரையாடல்.....
 
 
 
நபர் 1: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...
 
நபர் 2: வலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...
 
நபர் 1: ஏன்பா மௌலீத் ஓதுறியே, அது இஸ்லாத்துல உண்டா?
 
நபர் 2: பின்னே? நம் முன்னோர்கள் தொன்றுதொட்டே ஓதுறாங்களே ? இஸ்லாத்துல இல்லாமலா ஓதுறாங்க?
 
நபர் 1: அதில்லேப்பா, இஸ்லாத்துல இருக்கணும்ன்னா அது அல்லாஹ்வோ , அவனுடைய இறுதி நபி (ஸல்) அவர்களோ காட்டி தந்ததாக  தானே இருக்கணும், அப்படி ஏதாவது குரான்லையோ சஹிஹ் ஹதீஸ்லையோ  ஆதாரம் இருக்கா???
 
நபர் 2: ஒஹ்ஹ்ஹ் ......"அவனா" நீ ? நீ குரான்  ஹதீஸ் பார்ட்டியா? "ஆதாரம்" எல்லாம் வேற கேக்குறே!! நீ "அவனே" தான்....
 
நபர் 1: புரியலையே....
 
நபர் 2: புரியாது புரியாது....நீ விதண்டாவாதம் செய்யும் "வஹ்ஹாபி" தானே? உன் கூடவெல்லாம் பேசவே கூடாது....
 
நபர் 1: வஹ்ஹாபி!!???? குரான் ஹதீஸில் இருந்து ஆதாரம் கேட்பவன் வஹ்ஹாபின்னா...ஆமா நான் வஹ்ஹாபியே தான்!! "வஹ்ஹாப்" அல்லாஹ்வுடை திருநாமங்களில் ஓன்று! ஆம்.... நான் அல்லாஹ்வின் அடிமையே தான்!!! அல்ஹம்துலில்லாஹ்!!!! சரி, அப்போ நீங்க யாரு?
 
நபர் 2: மூஞ்சிலே தாடி நிறைய இருக்கும்போதே நான் உசாராயிருக்கணும்! நீ அவனே தான்னு! தெரியாம உனக்கு ஸலாத்துக்கு பதில் வேறு சொல்லி தொலைசிட்டேனே????? நான் ஒன்னும் உன்னைமாதிரி இல்லை. நான் சுன்னத்த்வாதி யாக்கும்.....உன்னை நாக்க புடுங்குற மாதிரி  கேக்கணும்....ஏம்பா மவ்லீது ஓதக்கூடாது? நபி (ஸல்) எங்க உயிரைவிட மேலானவர்கள். நாங்க ஓதுறது உங்களுக்கு ஏன் வலிக்குது, ரசூல்(ஸல்) அவர்களை மதிக்காத வஹ்ஹாபிக்களா....???
 
(அதிக புரிதல்க்காக இப்போது பெயர்கள் மாற்றப்படுகின்றன)
 
வஹ்ஹாபி: சகோதரா, ரசூல்(ஸல்) அவர்களை உயிரைவிட மேலாக நேசிக்காதவர்கள் முஸ்லிம்களே அல்லன். ஆனால், நேசிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு நபி (ஸல்) அவர்களது போதனைகளை மதிக்காதவர்கள் ரசூல் (ஸல்)  அவர்களை நிந்திப்பது போன்றது.
 
சுன்னத்வாதி: நீங்க தான் நிந்திக்கிறீர்கள். ரசூல் (ஸல்) அவர்களை புகழ்வதிலிருந்து எங்களை தடுக்கிறீர்களே, சகோ?
 
வஹ்ஹாபி: இல்லை, சகோ...நாங்கள் சொல்வது புகழ்வதில் வரம்பு மீறாதீர்கள் என்றே! மௌலீது பாடல்களை அர்த்தமரியாமல் பாடுகிறீர்கள், அவைகளில் ரசூல் (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக புகழும் வாசகங்கள் உள்ளன! எனவே அதை தான் எதிர்க்கிறோம், புரிந்துகொள்ளுங்கள். கிறிஸ்தவர்கள் ஈசா நபி (அலை) அவர்களை வரம்புமீறி புகழ்ந்ததை போல் தமக்கு நேர்ந்துவிடக்கூடாது என்று அஞ்சினார்கள் நம் உயிரிலும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்கள். அவர்கள் எதை அஞ்சினார்களோ, அதை நீங்கள் செய்யாதீர்கள் என்று தான் சொல்கிறோம்.
 
சுன்னத்வாதி: பின்னே என்ன செய்யணுமாம்?
 
வஹ்ஹாபி: ரசூல் (ஸல்) அவர்கள் மார்க்கவிஷயங்களில் எதை எல்லாம் செய்து காட்டித்தந்தார்களோ, எதை எல்லாம் வலியுறுத்தினார்களோ, எவற்றை எல்லாம் அறிந்தும் தடுக்கவில்லையோ  அவற்றை மட்டும் செய்யுங்கள், எவற்றை எல்லாம் தடுத்தார்களோ அவற்றை செய்யாதீர்கள், அவை உங்களுக்கு எவ்வளவு நல்லதாக பட்டாலும். அதுதான் ரசூல் (ஸல்) அவர்களை மதிக்கும் முறை! வரம்புமீறாத முறை...அல்லாஹ்வுக்கு உவப்பான முறை!
 
சுன்னத்வாதி: சும்மா குழப்பாதீங்க சகோ. உங்களைப்போன்றவர்கள் தான் இந்த சமுதாயத்தை பிரிவு படுத்துகிறீர்கள், இல்லாததையும் பொல்லாததையும்  எல்லாம் சொல்லி. இனியாவது நிறுத்துங்களேன்...ஒற்றுமை விரோதிகளே .....
 
வஹ்ஹாபி: நாங்களா? நாங்களா பிளவு படுத்தினோம்?? அபாண்டமாக பழிசுமத்தாதீர்கள் சகோ. இஸ்லாத்தில் இல்லாத மதுஹபுகளை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இல்லாத ஷரத்துகளை மார்க்கத்தில் திணித்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் சாதிகளையும் புகுத்தி மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்களிடம், "அதெல்லாம் கூடாதப்பா, நாம் எல்லாரும் முஸ்லிம்கள், நமக்கும் எந்த மதுஹபுகளும் தேவை இல்லை, நம் வாழ்வு குரான் மற்றும் சஹிஹ் ஹதீஸ் என்ன சொல்கிரதோ அப்படி அமையட்டும்" என்று சொன்ன நாங்களா பிரிவினையை தூண்டினோம்??? "தூய இஸ்லாத்தை மட்டும் பின்பற்றுங்கள் அறியாமைக்கால அனாச்சாரங்களையும் மூட பழக்கவழக்கங்களையும் விட்டொழியுங்கள்", என்று சொன்னதற்காக அல்லாஹ்வின் பள்ளியில் தொழக்கூட அனுமதிக்காத நீங்களா "ஒற்றுமை" பற்றி பேசுகிறீர்கள்? கொள்கையை சொன்னதற்காக எங்களை  வெட்டுகுத்து என்றும்,   ஊர்விலக்கம் என்றும்  வன்கொடுமைகள்  இழைத்த நீங்களா பிரிவினைவாத குற்றத்தை எங்கள்  மீது சுமத்துகிறீர்கள்??? நாங்கள் குரான் ஹதீஸ் மட்டும் போதும் என்றும் சொல்லும் முன்னர் மட்டும் நீங்கள் ஒற்றுமையாகவா இருந்தீர்கள்? சிந்தியுங்கள்!!! பக்கத்து ஜமாத்துகளுக்கிடையே கூட தர்காஹ்க்களின் பெயரால் வெட்டு குத்து  நடைபெறவில்லையா??? மனசாட்சியை தொட்டு கேட்டுப்பாருங்கள் யார் பிரிவினைவாதிகள் என்று!!!அல்லாஹ் போதுமானவன்!
 
சுன்னத்வாதி: எல்லாம் இருக்கட்டும் ... மௌலீத் ஓதி நாங்க வரம்புமீருறோம் ன்னு சொல்றீங்க , தர்காஹ் ல உள்ள கப்ர் ல போய் வணங்குறோம் ன்னு சொல்லுறீங்க...இதெல்லாம் அவதூறு இல்லையா? வரம்புமீறல் இல்லையா ??? நாங்க எங்க வணங்கினோம்? எங்க உள்ளங்களை நீங்கள் தெரிஞ்சுக்கிட்டீங்களா?? வழிபடுதல் (WORSHIP /PRAY ), வணக்கம் (GREETING /WISHING ), மரியாதை (RESPECT ) செலுத்துதல்...இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் நீங்களும் குழம்பி எங்களையும் குற்றம் சொல்லுறீங்களே , இது தான் உங்க தூய இஸ்லாமா??? அல்லாஹ்வ தொழுறது மாதிரி நாங்க எங்க தர்காஹ் ல செய்யுறோம் ??? சொல்லுங்க
 
வஹ்ஹாபி:  சகோ...வார்த்தை விளையாட்டு வேண்டாம். வணக்கத்துக்குரிய ஒரே நாயன் அல்லாஹ் என்று நாங்கள் சொல்லுறோம்...அப்படி எங்கே சொல்லிஇருக்குன்னு நீங்க கேக்குறீங்க! எந்த வார்த்தையை வேணும்ன்னாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...அல்லாஹ் மட்டுமே அளிக்ககூடிய பரக்கத்தையும், ஷிப்பாத்தையும் நல்லடியார்களும் வழங்குவார்கள் என்று நினைப்பதே இணைவைப்பு தானே சகோ? இனி, "வணங்கவில்லை, மரியாதை தான்" என்கிறீர்கள்? "துவா" என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாடு, நேர்ச்சை செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது, அழைத்து பிரார்த்தித்தால் பதிலளிப்பான் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது!! இந்த வழிபாடை எல்லாம்  நல்லடியார்கள் என்பவர்களிடம் செய்கிறீர்களா இல்லையா ? சரி நீங்கள் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். மதுஹபை பின்பற்றாதவர்கள் தொழக்கூட வரக்கூடாது என்று அல்லாஹ்வின் பள்ளியில் எழுதிப்போட தெரிந்த உங்களுக்கு அவுலியாக்களிடம் துவா செய்பவர்களுக்கு அனுமதியில்லைன்னு ஒரு போர்டு வைக்க கூட தைரியமில்லையே? அல்லாஹ்வை விட அவுலியாவை பயப்படுவதாலா?
 
சுன்னத்வாதி: இதோ பாருங்க....கப்ர் வழிபாடு நாங்கள் செய்யவே இல்லை. யாரும் செய்வதில்லை. நாங்கள் தர்காஹ் வில் செய்வது சுன்னத்தான சியாரத் மட்டுமே!! சும்மா இல்லை...இந்த வஹ்ஹாபிக்கள் சியாரத்தை மறுப்பவர்கள் என்று எல்லாரும் சொல்வது
 
வஹ்ஹாபி: சகோ. சுன்னத்தை நாங்கள் மறுத்தொமா  ??? அஸ்தஹ்பிர்அல்லாஹ்!!! "சியாரத்" என்பது மறுமையை/மரணத்தை  நினைவு கூரும்போருட்டு வலியுறுத்தப்பட்ட மிக அழகிய சுன்னத்! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்யவேண்டும் என சொல்லித்தந்தார்களோ  , அப்படியே செய்யவேண்டும்! அல்லாமல், உங்கள் மனம் போன போக்கில் செய்யக்கூடாது. தர்காஹ் வில் செல்லும் உங்களில் எத்தனை பேர் உங்கள் பெற்றோர்களின் அல்லது பாட்டன் முப்பாட்டன்களின் கப்ரில் சென்று சியாரத் செய்கிறீர்கள் ஒவ்வொரு வெள்ளியன்றும் ??? சொல்லுங்கள் பார்ப்போம்....
 
 சுன்னத்வாதி: என்ன புதுசா இருக்கே!!! ஹிஹிஹி...இப்போ சியாரத் கூடும்ன்னு சொல்றீங்களே????
 
வஹ்ஹாபி: சகோ. "சியாரத் செய்வது இப்படி இல்லை",  என்று சொல்வது "சியாரத்தே இல்லை', என்று சொல்வதல்ல! நீங்கள் தர்காஹ் வில் துவா கேட்பது, மாலை போடுவது, நேர்ச்சை செய்வது, புனித (!?) தண்ணீர் குடிப்பது, பிராசாதம் வழங்குவது, விழா எடுப்பது, சந்தனக்கூடு  எடுப்பது, தேர் இழுப்பது, கொடி ஏற்றுவது, விடியவிடிய நன்மை நாடி குரான் அல்லாதவைகளை பக்தியுடன் பாடுவது , மரணித்தவர்களை அழைத்து பிரார்த்திப்பது.... இதெல்லாம் சியாரத்தே இல்லை என்கிறோம். இதுதான் சியாரத் என்றால் ஹதீஸை தந்து எங்கள் பெரமண்டையில் ஒண்ணு போடுங்கள் என்கிறோம் ...புரிஞ்சுதா???
 
சுன்னத்வாதி: இதெல்லாம் செய்யாம தர்காஹ்வுக்கு போலாமா? அப்போ ஏன் தர்காஹ் க்களை இடிக்கனும்ன்னு தீவிரவாதத்தை பரப்புறீங்க?
 
வஹ்ஹாபி: சகோ. தர்காஹ் என்பது இஸ்லாத்தில் இல்லை. கப்ர் எப்படி இருக்கவேண்டும் என்று ஹதீஸில் உள்ளது, படியுங்கள் . அதற்க்கு மாற்றமாக கப்ரை உயரமாக எழுப்புவதும் அதற்க்கு மேலே (மேலே என்றால் அந்த இடத்தில்) கட்டடம் எழுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் அப்படிப்பட்ட இஸ்லாத்துக்கு புறம்பான கட்டடம் இடிக்கப்படவேண்டியது என்கிறோம்.
 
சுன்னத்வாதி: தெரியாமல் தான் கேட்க்கிறேன்....தர்காஹ்வை இடிப்போம் என்கிறீர்கள், அவுலியாவை தவறாக பேசுகிறீர்கள் இப்படிதான் அழகிய தாவா செய்ய உங்க தூய இஸ்லாம் சொல்கிறதா?
 
வஹ்ஹாபி: சகோ. அதென்ன "உங்க தூய இஸ்லாம்", இது நம்ம இஸ்லாம், நாம ஒரே இஸ்லாத்தில் உள்ளதால் தான் தயவு தாட்சண்ணியம் இன்றி சொல்லவேண்டியிருக்கு. நம்ம வீட்டுல தம்பி குற்றம் செய்தால் கண்டிப்போம், கடுமையாக தண்டிப்போம். அதுவே அடுத்தவீட்டு பைய்யன் என்றால் நிதானமாகவே சொல்வோம். உங்ககிட்டே சகோதரன்கிற உரிமைல கடுமையாய் சொல்றோம் அவ்வளவுதான்.
 
சுன்னத்வாதி: அப்போ அவுலியாக்களை திட்டுவது, மறுப்பது எல்லாம் தான் இஸ்லாமா??/......
 
வஹ்ஹாபி: சகோ. நாங்கள் அவுலியாக்களை மறுக்கவில்லை. அல்லாஹ்வின் நேசத்தை பெறுபவர்கள் என்றென்றும் உண்டு. அல்லாஹ்வின் நேசத்தை யார் பெறுவார்கள் என்று அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும், நமக்கு  அவன் அறிவித்தாலேயன்றி தெரியாது!  எனவே இன்னாரின்னார் தான் அவுலியா, இவர்கள் எல்லாம் சொர்க்கம் போவார்கள் என்று சொல்லவேண்டுமானால் உங்களுக்கு வஹீ வந்திருக்கவேண்டும். இல்லையேல் நீங்களாக இட்டுகட்டுகிரீர்கள். நாங்கள்  சொல்வது நாம் எல்லாரும் சுவனத்துக்காக போராடுவோம். இவர் தான் அவுலியா என்று தீர்மானிப்பதற்கு நமக்கு அதிகாரமில்லை, அது தேவையுமில்லை, அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான மறைவான விஷயம். நாம் நல்லடியார்களாக வாழ முயற்சிப்போம் என்று தான் சொல்கிறோம். ஒருவரை அவுலியா என்று நாமே முடிவுபண்ணி சொல்லிக்கொண்டு அவரின் பெயரால் அதீத கற்பனை கதைகளை புனைந்து புனிதம் கர்ப்பிக்கும்போது நாங்கள்  அதை தட்டிகேட்க்கிறோம், அல்லாமல் நீங்கள் அவுலியா என்று சொல்லும் நபர்களுக்கும் எங்களுக்கும் என்ன சொத்து பிரச்சினையா என்ன ???? புரிந்துகொள்ளுங்கள் .
 
சுன்னத்வாதி: சரி, சரி  உங்ககிட்டே பேசினாலே தல சுத்தும், விதண்டாவாதத்துக்கு ஒரு அளவே இல்லை! ஊரே உங்களால பிரிஞ்சு கிடக்கு. போங்க போய் வேலைய பாருங்க....நீங்கெல்லாம் மட்டும் ரொம்ப யோக்கியம், எங்களை மட்டும் காபிர்ன்னு  சொல்லுங்க...
 
வஹ்ஹாபி: சகோ. உங்க பிரச்சினையே இதுதான். நாங்க என்ன சொல்றோம்ன்னு கேக்காம, பிடிவாதம் பிடிக்கிறது. நாங்க எதையும் எங்க கருத்தா சொல்லியிருந்தா நீங்க ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் நாங்க சொல்றதை குரான் மற்றும் சஹிஹ் ஹதீசுடன் ஒப்பிட்டு பார்த்து ஏற்றுக்கொள்ளலாம் தானே? அதுல என்ன முட்டுக்கட்டை உங்களுக்கு? அப்புறம்....நாங்க உங்களை காபிர்ன்னும் சொல்லல , நாங்கெல்லாம் ரொம்ப சுத்தமானவங்க, நாங்க மட்டுமே சுவர்க்கம்போவோம்ன்னும் சொல்லல. மாறாக, இதுதான் சரியான வழின்னு தெரிஞ்சத அனைவருக்கும் சொல்றோம், இதையெல்லாம் செய்தால் அது ஷிர்க்கில் கொண்டு போய் விட்டுரும் ன்னும் சொல்றோம் ....நாமெல்லாம் சேர்ந்து சுவர்க்கம் போவோம்ன்னு சொல்றோம் .....எனக்கும் உங்களுக்கும் ஒரே இறைவன் தான் அவனை மட்டுமே வழிபடுவோம், வணகுவோம் ன்னு  சொல்றோம். அதுக்கு எனக்கு உரிமையும் இருக்கு, அது என் கடமையும் கூட .....ஏன்னா நீங்க என் சகோதரன், உங்களுக்கு நன்மையை ஏவுவதும் தீய்மையை விட்டு தடுப்பதும் என் மீது கட்டாயம் ! அதை செய்துக்கிட்டே இருப்பேன் சகோ....அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன், நம் அனைவரையும் சுவர்க்கவாதிகளாக ஆக்கிட அவனை வேண்டியவண்ணம் விடைபெறுகிறேன்....ஒரே ஒரு இறை வசனத்தை மட்டும் உங்களுக்கு நினைவூட்டுபவனாக.....
 
//திருகுரான் 33:36
 
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.//
 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...
 
சுன்னத்வாதி: வ அலைக்கும்.......
 
#ஷிர்க்
#சுன்னத்_வல்_ஜமாஅத் 
#தௌஹீத்
#இஸ்லாம்
 
*************************************
அன்புடன்
சுபுஹான் சுல்தான்
 

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...